நாமக்கல்லில் மத்திய அரசுக்கு எதிராக, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கர்நாடகத்தில் மஜத மற்றும் காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடந்த ஒரு வாரமாக ராஜிநாமா அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். இதனால் அங்கு கடுமையான அரசியல் குழப்பம் நிலவுகிறது. இதற்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தான் காரணம் என காங்கிரஸ் தலைமை குற்றம்சாட்டுகிறது. நாடு முழுவதும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், பூங்கா சாலை சந்திப்பில் சனிக்கிழமை மாவட்ட தலைவர் கே.எம்.ஷேக்நவீத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திரளான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு பா.ஜ.க. அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.