நாமக்கல் மக்கள் நீதிமன்றத்தில், 2000 வழக்குகளில் சமரசம் ஏற்பட்டு ரூ.16 கோடியே 21 லட்சம் இரு தரப்பிலும் சனிக்கிழமை வசூல் செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 5 மணி வரை நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி ஹெச்.இளவழகன் வழிகாட்டுதலின்படி, நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றமானது நடைபெற்றது. நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட அமர்வுகள் முன்னிலையில் வழக்கு விசாரணையானது நடைபெற்றது. இதில், வழக்குகள் சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது.
விபத்து வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம், தொழிலாளர் நலன் தொடர்பான வழக்குகள், மின் பயன்பாடு, வீட்டு வரி மற்றும் இதர பொதுபயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன. ஒவ்வோர் வழக்குக்கும் விரைவாக தீர்ப்பளிக்கப்பட்டது.
நிலுவையில் உள்ள வழக்குகள் தவிர புதிதாக தாக்கல் செய்ய தகுதியுடைய வழக்குகளும் மற்றும் பிரச்னைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த மக்கள் நீதிமன்றம் மூலம், முத்திரைத்தாள் வாயிலாக செலுத்திய கட்டணம் திரும்பப் பெறும் வாய்ப்பு, வழக்குகளில் தீர்ப்பு கண்டதும் உடனடியாக அதற்கான தீர்ப்பு நகல் வழங்கல், இந்த நீதிமன்றம் வாயிலாக வழங்கப்படும் தீர்ப்புக்கு பின் மேல்முறையீடு செய்ய இயலாது. மக்கள் நீதிமன்றத்தில் வெற்றி பெற்றவர், தோல்வியுற்றவர் என்பதுகிடையாது.
விரைவாக நீதி கிடைக்கும் என்பதால், மனுதாரர்களும், எதிர்மனுதாரர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 2000 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன. இதன் மூலம் ரூ.16 கோடியே 21 லட்சம் வசூல் செய்யப்பட்டது.
இந்த மக்கள் நீதிமன்றத்திற்கான ஏற்பாடுகளை, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான டி.சுஜாதா தலைமையில் நீதிமன்ற அலுவலர்கள்
செய்திருந்தனர்.