நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம், நாமக்கல் உழவர் சந்தை அருகில் உள்ள திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட தலைவர் வி.பழனியப்பன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, சேலம் விநாயகா மிஷன் மருத்துவமனை உதவி மருத்துவ இயக்குநர் மருத்துவர் ஆர்.அசோக் கலந்து கொண்டார். இக் கூட்டத்தில், போரில் அல்லது எல்லை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டபோது உடல் நிலை பாதிக்கப்பட்ட முன்னாள் படைவீரர்களுக்கு, வீட்டு வரி, தண்ணீர் வரி, சுங்கக் கட்டணம் ஆகியவற்றில் இருந்து தமிழக அரசு விலக்கு அளிக்க வேண்டும். குரூப் சி, டி பணியிடங்களுக்கு, முன்னாள் படைவீரர்களை போட்டித் தேர்வின்றி முன்னுரிமை அடிப்படையில் சேர்க்க வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் தேசிய மாணவர் படை அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க நிர்வாகிகள் ஆர்.வரதராஜன், ஆர்.வீரப்பன், ஆர்.காளியப்பன், எஸ்.மாரிமுத்து, கே.ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.