நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் பங்கேற்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் பா.மோகன் வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பு:
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பால் பண்ணை உதவியாளர், வான்கோழிப் பண்ணை உதவியாளர், கோழிகளுக்கான தடுப்பூசி அளிப்பவர், சிறிய பிராணிகள் உதவியாளர், பால் ஆலை உதவியாளர், பால் மற்றும் பால் பொருள்கள் தரக்கட்டுப்பாடு உதவியாளர், தீவன ஆலை உதவியாளர், அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு அரங்க உதவியாளர், குஞ்சு பொரிப்பான் மேற்பார்வையாளர், கோழிப்பண்ணை மேற்பார்வையாளர், இனப் பெருக்க கோழிப்பண்ணை மேற்பார்வையாளர், கால்நடைப் பண்ணை மேலாளர், கோழிப்பண்ணை மேலாளர், ஆய்வக உதவியாளர் மற்றும் தீவன பகுப்பாய்வு தொழில் நுட்ப உதவியாளர் பற்றிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இப்பயிற்சியின் காலம் ஒரு மாதம் முதல் மூன்று மாதம் வரையில் நடைபெறுகிறது. பயிற்சிக்கான கட்டணம் ரூ.500 முதல் 3 ஆயிரம் வரையில் பயிற்சிக்கு ஏற்றவாறு மாறுபடும். தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்கள், எட்டாவது, பத்தாவது மற்றும் பன்னிரெண்டாவது தேர்ச்சி பெற்றவர்கள் ஆகியோர் தங்களது கல்வித் தகுதிக்கு ஏற்ப திறன் மேம்பாட்டுப் பயிற்சியைத் தேர்வு செய்து கொள்ளலாம். தீவன பகுப்பாய்வு தொழில்நுட்ப உதவியாளர் படிப்புக்கு இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியலில் இளங்கலைப் பட்டம் முடித்தவர்கள் அல்லது ஏதாவது பட்டப்படிப்பை முடித்து தீவனப் பகுப்பாய்வில் அனுபவமிக்கவர்கள் கட்டணமாக ரூ.5 ஆயிரம் செலுத்தி படிக்கலாம். இப்பயிற்சியில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். கால்நடை வளர்ப்போர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04286-266491 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.