குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவில், 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் மு.ஆசியா மரியம் வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 28-இல் தொடங்கி ஜூன் 3-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட உள்பிரிவு இல்லாத பட்டா மாறுதல், உள்பிரிவு உள்ள பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கியது என மொத்தம் 764 மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சியில், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 29 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 3 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை, 2 நபர்களின் குடும்பத்தினருக்கு இயற்கை மரண உதவித்தொகை, 14 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், 12 பயனாளிகளுக்கு பட்டா பெறுதலுக்கான ஆணைகள் என மொத்தம் 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், குமாரபாளையம் வட்டாட்சியர் ம.தங்கம், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் மு.கதிரேசன், நகர நிலவரி திட்ட தனி வட்டாட்சியர் ஜானகி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.