தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் -4 தேர்வுக்கான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இத் தேர்வினை எழுதலாம் என்பதால், ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. இத் தேர்வுக்காக, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கப்பட்டன. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் சுதா, மல்லிகா ஆகியோர் பயிற்சி வழங்கினர். இப் பயிற்சி வகுப்பில் பங்கேற்போருக்கு இலவச பாடக் குறிப்புகள் வழங்குவதோடு, மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. கடந்தாண்டு இந்த அலுவலகம் மூலம் பயிற்சி பெற்றவர்களில் 45 பேர் அரசுப் பணிக்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. குரூப் -4 தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச பயிற்சி தொடர்பான மேலும் விவரங்களுக்கு 04286 - 222260 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.