நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தனியார் துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம், வெள்ளிக்கிழமை (ஜூன் 14) காலை 10.30 மணிக்கு, நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில், தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை, அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம்.
இம் முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு மேலாளர், கணினி இயக்குபவர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேலாளர், டீம் லீடர், சூபர்வைசர், கணக்காளர், காசாளர், தட்டச்சர், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்ட்டெண்ட் போன்ற பணிகளுக்கு ஆள்களைத் தேர்வு செய்யவுள்ளனர். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பெறாதவர்கள், 12-ம் வகுப்பு, பட்டயப் படிப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ.யில் பயிற்சி மற்றும் கணினி தொடர்பான படிப்பு முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்து வித கல்வித்தகுதி உள்ளோரும் இம் முகாமில் கலந்துகொண்டு பயன் பெறலாம். மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும் இலவச திறன்பயிற்சிகளில் சேர பதிவு ஆலோசனையும் வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.