ராசிபுரம் அருகேயுள்ள போதமலை வாழ்மக்கள் குடிநீர் கேட்டு வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டம் நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ளது போதமலை கிராமம். இங்கு கீழூர், கெடமலை, மேலூர் உள்ளிட்ட குக்கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட அய்யன்குட்டை பகுதியில் மலைவாழ் மக்களுக்கு குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டு பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு தற்போது அப் பகுதியில் முறையான குடிநீர் மற்றும் சாலை வசதிகள் இல்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை முறையிட்டும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறுகின்றனர். இதனையடுத்து குடியிருப்புப் பகுதியில் குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு, மனு கொடுத்தனர்.