பரமத்திவேலூர், ஜூன்13: பரமத்தி வேலூரில் உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்தவரை போலீஸார் கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
பரமத்தி வேலூர் சந்தைப்பேட்டை பகுதியில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவதாக பரமத்தி வேலூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத் தகவலின் அடிப்படையில் பரமத்தி வேலூர் காவல் ஆய்வாளர் மனோகரன் தலைமையிலான போலீஸார், சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் உரிமம் இல்லாமல் பட்டாசு விற்பனை செய்ததாக ரமேஷ் (54) என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.