குமாரபாளையம், ஜூன 13: குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் விதிகளை மீறி இயங்கியதோடு, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தியதாக 16 சாய மற்றும் சலவைப் பட்டறைகளின் மின் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குமாரபாளையம் பகுதியில் விதிகளை மீறி இயங்கும் சாயப்பட்டறைகள் குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டதில் குளத்துக்காடு, தேசிய நெடுஞ்சாலை, கலியனூர், ஆவத்திபாளையம் ஆகிய பகுதியில் இயங்கிய 16 சாய மற்றும் சலவைப் பட்டறைகள் ரகசியமாக கழிவுகளை நீர்நிலைகளில் வெளியேற்றியது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மாசுக்காட்டுப்பாட்டு வாரியம் சார்பில் விதிகளை மீறி இயங்கிய சாயப் பட்டறைகளின் மின் இணைப்புகளைத் துண்டிக்க மின்வாரியத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதன்பேரில், மின்வாரிய அதிகாரிகள் வியாழக்கிழமை 9 சாயப் பட்டறைகளின் மின் இணைப்புகளைத் துண்டித்தனர். மீதியுள்ள பட்டறைகளின் மின் இணைப்பு ஓரிரு நாள்களில் துண்டிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.