நாமக்கல், ஜூன் 13: கொல்லிமலையில் நிலத்தகராறில் பெண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது உறவினரை போலீஸார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், வாழவந்திநாடு அருகேயுள்ள பெருமாப்பட்டியை காலனியைச் சேர்ந்தவர் சேகர் (58). இவரது மனைவி பூமணி(55). விவசாயம் செய்து வந்த சேகரின் தம்பி கண்ணன் (48). இவரது மனைவி பவானி (40). சகோதரர்களுக்கு சொந்தமாக மூன்றரை ஏக்கர் பூர்வீக நிலம் உள்ளது.
தனக்குச் சொந்தமான தோட்டத்தில் கண்ணன் விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு வீடு கட்டுவதற்காக அண்ணன் சேகரிடம், 12 சென்ட் நிலம் தருமாறு கண்ணன் கேட்டாராம். இதற்கு, அவரது அண்ணி பூமணி, வீடு கட்டுவதற்காக அவ்வளவு நிலத்தை தரமுடியாது எனக்கூறி கண்ணனை அவமானப்படுத்தும் வகையில் பேசினாராம். இதனால் அண்ணி மீது கோபத்தில் இருந்த கண்ணன், வியாழக்கிழமை காலை 11 மணியளவில், பெருமாப்பட்டி காலனிப் பகுதியில் உள்ள தோட்டத்துக்கு சென்றுள்ளார்.
அங்கு வாழையிலை அறுக்கும் பணியில் பூமணி ஈடுபட்டிருந்தார். தனக்கு நிலம் வழங்குவதற்கு அண்ணி தடையாக இருக்கிறாரே என்ற ஆத்திரத்தில் அங்கிருந்த கட்டையால் அவரை அடித்துக் கொலை செய்து விட்டு கண்ணன் தப்பியோடி விட்டாராம். தகவல் அறிந்து வந்த அக்கம், பக்கத்தினர் மற்றும் வாழவந்திநாடு போலீஸார், பூமணியை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் அவர் உயிரிழந்து விட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வாழவந்திநாடு போலீஸார், வீட்டில் பதுங்கியிருந்த கண்ணனை கைது செய்தனர்.