பரமத்தி வேலூர், ஜூன் 13: பரமத்தி வேலூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க திருமண மண்டபத்தை மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி திறந்து வைத்தார்.
பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தியில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் பரமத்தி வேலூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள வெள்ளிவிழா திருமண மண்டபம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பரமத்தி வேலூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பி.பி.எஸ். ராஜூ (எ) ராமசாமி தலைமை வகித்தார். சங்கத்தின் செயலாளர் செந்தில்குமார் வரவேற்றுப் பேசினார். புதிதாக கட்டப்பட்ட திருமண மண்டபத்தை மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார். திருமண மண்டப அலுவலகத்தை முன்னாள் எம்.எல்.ஏ., நெடுஞ்செழியன் திறந்து வைத்தார். முதல் உணவு கூடத்தை பரமத்தி வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் மூர்த்தி திறந்து வைத்தார். இரண்டாவது உணவு கூடத்தை முன்னாள் எம்.எல்.ஏ. மணி திறந்து வைத்தார். நாமக்கல் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சரவணன், பரமத்தி வேலூர் பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் தனராஜ், முன்னாள் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி, பிள்ளைக்களத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தனபால் உள்ளிட்ட லாரி லாரி, டிரைலர், எல்.பி.ஜி, ரிக் உரிமையாளர் உள்ளிட்ட சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். சங்கத்தின் இணைச் செயலாளர் வாசு நன்றி கூறினார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் உப தலைவர் சக்திவேல், பொருளாளர் முத்துசாமி ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.