நாமக்கல், ஜூன் 13: நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 2 - தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவியருக்கான சிறப்பு துணைத் தேர்வு மூன்று மையங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது. இத்தேர்வை 240 பேர் எழுதினர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு, கடந்த மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி 19 - ஆம் தேதி வரை நடைபெற்றது. இத் தேர்வு முடிவானது ஏப்ரல் 19-ஆம் தேதி வெளியானது. இந்தத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் உடனடியாக எழுதி தேர்ச்சி பெறலாம் என்ற பள்ளிக் கல்வித்துறை உத்தரவின் அடிப்படையில் சிறப்பு துணைத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் மாணவ, மாணவியரிடமிருந்து பெறப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில், இத் தேர்வுக்காக நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கீரனூர் வெற்றிவிகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ராசிபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளி என மூன்று மையங்கள்
அமைக்கப்பட்டிருந்தன.
இந்த தேர்வு வியாழக்கிழமை (ஜூன் 13) தொடங்கியது. காலை 10 மணி முதல் 1 மணி வரையில், இயற்பியல் மற்றும் பொருளியல் தேர்வுகள் நடைபெற்றன. நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மையத்தில், 113 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 16 பேர் தேர்வுக்கு வரவில்லை. மீதமுள்ள 97 பேர் மட்டுமே தேர்வை எழுதினர்.
மொத்தமாக 3 மையங்களிலும் சேர்த்து 240 பேர் சிறப்பு துணைத் தேர்வை எழுதியதாக கல்வித்துறை அதிகாரிகள்
தெரிவித்தனர்.