நாமக்கல் மாவட்டம், மோகனூர் காளியம்மன், மாரியம்மன், செல்லாண்டியம்மன், நாவலடி கருப்பண்ண சுவாமி மற்றும் விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவானது, கடந்த ஆண்டு ஜூன் 17-ஆம் தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஞாயிறு, திங்கள்கிழமையன்று கும்பாபிஷேக முதலாமாண்டு நிறைவு விழா நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 16) காலை 7 மணிக்கு காளியம்மன் கோயிலில் மங்கள இசையுடன் விழா தொடங்கியது. அன்று விநாயகர் வழிபாடு, சங்கல்பம், மகா கணபதி யாகம், பூர்ணாஹுதி, தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. மாலை 4 மணியளவில் காளியம்மன் கோயிலில் மகா சண்டியாக பூர்வாங்க பூஜை, முதல் கால சண்டியாகம், நாவலடியான் கோயிலில் விநாயகர் வழிபாடு, யஜமான சங்கல்பம், முதல் கால 108 கலச பூஜை கோலாகலமாக
நடைபெற்றது.
அதன்பின், இரவு 8 மணிக்கு முதல் கால யாக பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, இல்லறம் சிறக்க மதுரையா, சிதம்பரமா என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. இரண்டாம் நாளான திங்கள்கிழமை காலை 6 மணிக்கு அசலதீபேஸ்வரர் கோயில் அருகே காவிரி ஆற்று படிக்கட்டுத் துறையில் இருந்து தீர்த்தக்குடம் புறப்பட்டு நகரின் முக்கிய வீதி வழியாக கோயிலை வந்தடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர், காலை 7 மணிக்கு நாவலடி கருப்பண்ணசுவாமி மற்றும் மாரியம்மன் கோயிலில் விநாயகர் வழிபாடு, இரண்டாம் கால 108 கலச பூஜை, யாக பூஜை, மகா பூர்ணாஹுதியும், ஸ்ரீ நாவலடி கருப்பண்ண சுவாமிக்கு 108 கலச அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. காலை 10 மணிக்கு காளியம்மன் கோயிலில் இரண்டாம் கால மகா சண்டியாகம், 13 அத்யாய தேவதைகள் யாகம், மங்கள திரவிய ஹோமம், கோ பூஜை, சுமங்கலி பூஜை, கன்யா பூஜை, தம்பதி தஜை நடைபெற்று மதியம் 12 மணிக்கு மேல் மகா பூர்ணாஹுதி, தீபாராதனை, கலச அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெறு பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. அன்று இரவு முதல் திங்கள்கிழமை மதியம் வரை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஸ்ரீ நாவலடி கருப்பண்ண சுவாமி, காளியம்மன், மாரியம்மன் கோயில் தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் குழு மற்றும் மணியன் குல கண்ணந்த குல குடிப் பாட்டு மக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.