கொல்லிமலை வட்டாரத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் நெல் -1 (கார் / குறுவை) மற்றும் இதர பயிர்களான ராகி, மொச்சைப் பயறு போன்ற பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், பிரதம மந்திரியின் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் காப்பீடு செய்து கொள்ளலாம் என கொல்லிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தி.அன்புச்செல்வி கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கொல்லிமலை வட்டாரத்தில் நெல் -1 (கார் / குறுவை) மற்றும் இதர பயிர்களான ராகி, மொச்சைப்பயறு போன்ற பயிர்களை பயிர்க் காப்பீடு செய்ய கொல்லிமலை வட்டாரத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் அனைத்து நெல் விவசாயிகளும் காப்பீடு செய்து கொள்ளலாம்.
பிரதம மந்திரியின் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பயிர்க் கடன் பெரும் விவசாயிகள், கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாக பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.கடன் பெறாத விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அல்லது பொது சேவை மையம் மூலமாக பயிர்க் காப்பீட்டுக்கு பதிவு செய்து கொள்ளலாம்.
இத் திட்டத்தில் சேர நெல் -1 (கார் / குறுவை) காப்பீடுத் திட்டத்தில் சேர்ந்து கொள்ள வரும் ஆகஸ்டு 16-ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும் இதர பயிர்களான ராகி, மொச்சைப்பயறு போன்ற பயிர்கள் காப்பீடுத் திட்டத்தில் சேர்ந்து கொள்ள வரும் ஆகஸ்டு 31-ஆம் தேதி கடைசி நாளாகும். ஆகையால் குறித்த நாளில் பயிர்க் காப்பீடு செய்து கொள்ள விவசாயிகள் முன்வரவேண்டும்.
மேலும், பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்ய தேவையான விண்ணப்பம், பாஸ்போட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை நகல், சிட்டா, அடங்கல், கிராம நிர்வாக அலுவலர் சான்று, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முன்பக்கம் நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீது பெற்றுக் கொள்ள
வேண்டும்.
விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியத்தொகை நெல் -1 (கார் / குறுவை) பயிருக்கு ஏக்கருக்கு ரூ.627 , ராகி பயிருக்கு ரூ.258 மொச்சைப் பயிருக்கு ரூ.315 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு கொல்லிமலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.