காவிரி ஆற்றில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு நிவாரண உதவி: ஆட்சியர் வழங்கினார்
By DIN | Published On : 25th June 2019 09:39 AM | Last Updated : 25th June 2019 09:39 AM | அ+அ அ- |

காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்துக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியர் வழங்கினார்.
நாமக்கல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி மொத்தம் 456 மனுக்களை வழங்கினர். மனுக்களைப் பெற்று கொண்ட ஆட்சியர், அவற்றை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி துரித நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அதன்பின், பரமத்தி வேலூர் வட்டம், பொத்தனூர் கிராமம், பெரியண்ணன் பிள்ளை சந்து பகுதியைச் சேர்ந்த சரவணன், ஜோதிமணி, சிறுவன் தீபகேஷ், தாரகேஷ் ஆகியோர் அண்மையில் பொத்தனூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இதையடுத்து, அவர்களின்குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.4 லட்சத்துக்கான காசோலைகளை இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் ஆட்சியர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் மு.துரை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் உள்பட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.