மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மூலம், எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை (ஜூன் 26) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மூலம் 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையில் படித்து வேலையற்ற 18 முதல் 35 வயதுக்குள்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு, சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாமில், எலச்சிபாளையம் வட்டாரத்தில் உள்ள வேலை தேடும் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரையில் கலந்து கொள்ளலாம். இம்முகாமின்போது, தங்களது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, கல்விச் சான்றிதழ்கள் ஆகியவற்றின் நகல்களுடன் பங்கேற்க வேண்டும்.
வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பணியாளர்களை தேர்வு செய்ய விரும்பும் நிறுவனங்கள், திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியரகம், கூடுதல் கட்டடம், நாமக்கல் மாவட்டம், தொலைபேசி எண்- 04286-281131. மேலும், தங்களது நிறுவனத்தின் பெயரை செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) மாலை 5 மணிக்குள் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.