உயிரை பணயம் வைத்து மனித உயிர்களைக் காப்பாற்றியவர்களுக்கு வழங்கப்படும் ஜீவன் ரக்ஷா பதக்கங்கள் பெறுவதற்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது; - மத்திய அரசின் ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள், 2020-ஆம் ஆண்டு ஜனவரியில் வழங்கப்படுகிறது. நீரில் முழ்கியவரைக் காப்பாற்றுதல், மின்சார விபத்துகள், சாலை விபத்துகள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கினத்தால் தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவர்களுக்காக வழங்கப்படுகிறது. உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம், துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவர்களுக்கும், தனக்கு காயம் ஏற்பட்டாலும் வீரத்துடன் தாமதமின்றி போராடி உயிரைக் காப்பாற்றியவர்களுக்கும் வழங்கப்படுகிறது.
இந்த விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு ஆணைய இணைய தள முகவரியான www.sdat.tn.gbv.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, நாமக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு மூன்று நகல்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.