பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் செவ்வாய்க்கிழமை உண்டியல் திறக்கப்பட்டதில், ரூ.8.98 லட்சம் உண்டியல் காணிக்கை கிடைக்கப் பெற்றது.
நாமக்கல் நகரின் மையப் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமி கோயிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் தங்களது காணிக்கையை செலுத்த வசதியாக, கோயில் நிர்வாகம் சார்பில் 5-க்கும் மேற்பட்ட உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த உண்டியல்கள் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திறந்து காணிக்கைகள் எண்ணப்படும்.
இந்த நிலையில், பசலி ஆண்டு முடிவடைவதையொட்டி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் ரமேஷ், தமிழரசு, தக்கார் வெங்கடேஷ், ஆய்வாளர் அம்சா ஆகியோர் முன்னிலையில், செவ்வாய்க்கிழமை காலை அனைத்து உண்டியல்களும் திறக்கப்பட்டன.
பின்னர் பக்தர்கள், வங்கியாளர்கள் மூலம் எண்ணப்பட்டதில், ரூ.8 லட்சத்து 98 ஆயிரம் காணிக்கை இருந்ததாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், நரசிம்மர் சுவாமி கோயில் உண்டியல்களும் திறந்து எண்ணப்பட்டதில், ரூ.9 லட்சத்து 1,189-ம், 37 கிராம் தங்கம், 140 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைக்கப் பெற்றது.