மக்களவைத் தேர்தலையொட்டி, பணம் விநியோகம் செய்யப்படுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள பறக்கும் படை, நிலை கண்காணிப்புக்குழு வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படுகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தல் தேதியை கடந்த 10-ஆம் தேதி அறிவித்தது. அன்று முதல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தேர்தல் விதிகள் மீறுவதை கட்டுப்படுத்தவும், பணப்புழக்கத்தைத் தடுக்கவும், ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக்குழு, விடியோ கண்காணிப்புக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட, 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், 65 - க்கும் மேற்பட்ட அரசுத்துறை ஊழியர்கள், போலீஸார் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கென சுமார் 25 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் சரியான முறையில் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனரா, வாகனங்கள் குறிப்பிட்ட எல்லையைக் கடந்து செல்கிறதா, எத்தனை கிலோ மீட்டர் தூரம் சென்றுள்ளது, ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்கிறதா என்பதை கண்காணிக்கும் வகையில், ஒவ்வொரு வாகனத்திலும் ஜிபிஎஸ்(வேகக்கட்டுப்பாட்டு கருவி) பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்கென வருவாய்த்துறை அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ள வாகனங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பாளர். அதேபோல், தமிழக தேர்தல் ஆணையத்திலும் இவ்வாகனங்களின் செயல்பாடுகள் கண்காணிப்படுகிறது. இதனால் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி முழுவதும் சுற்றி வருகின்றனர்.