நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி முகாம், திருச்செங்கோட்டில் அண்மையில் நடைபெற்றது
நாமக்கல் ஆட்சியர் மற்றும் மாவட்டத் தேர்தல் அலுவலர் மு. ஆசியா மரியம் பணிகளை ஆய்வு செய்தார்.
நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி, மண்டல அலுவலர்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றி விளக்கப்பட்டது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களை எவ்வாறு கையாள்வது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்படும்பட்டசத்தில் எப்படி சரிசெய்ய வேண்டும் என்பது குறித்து மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் அளிக்கப்பட்டது.
திருச்செங்கோடு செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த முகாமில் உதவித் தேர்தல் அலுவலரும், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியருமான மணிராஜ் பயிற்சி அளித்தார். ஒரு மண்டல அலுவலரின் கட்டுப்பாட்டில் 10 முதல் 12 வாக்குச்சாவடிகள் இருக்கும், அதற்கு செல்வதற்கான வழி விவரம், தூரத்தை அறிந்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கடமைகள் குறித்தும், தேர்தலுக்கு முன்பும் வாக்குப் பதிவு நாளன்றும் அவர்களுடைய பொறுப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப் பட்டது. மண்டல அலுவலர்களின் சந்தேகங்களை கேட்டு உதவித் தேர்தல் அலுவலர் மணிராஜ் விளக்கமளித்தார். இதனைத் தொடர்ந்து தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் மு.ஆசியா மரியம் முகாம் நடக்கும் இடத்துக்கு நேரில் வந்து இயந்திரங்களை கையாள்வது குறித்து ஆய்வு செய்தார். முகாமில் மண்டல அலுவலர்கள், வருவாய்த் துறை மற்றும் நகராட்சி அலுவலர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
பரமத்திவேலூரில்...
பரமத்தி வேலூர் அருகே உள்ள பரமத்தியில், பரமத்தி வேலூர் சட்டப்பேரவைத் தொகுதி மண்டல அலுவலர்களுக்கு நாமக்கல் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்துவது குறித்த முதல் கட்ட பயிற்சி
வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான மு.ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டார்.
நாமக்கல் மக்களவைத் தொகுதி தேர்தலில் திருச்செங்கோடு, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், சங்ககிரி மற்றும் பரமத்தி வேலூர் உள்ளிட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் மக்களவைத் தேர்தல் நடத்துவது குறித்த மண்ட அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் அந்த சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இதில் பரமத்தி வேலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மண்டல அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி பரமத்தி சமுதாயக் கூட்டத்தில் நடைபெற்றது. பரமத்தி வேலூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் தேவிகாராணி தலைமையில் இப் பயிற்சி நடைபெற்றது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான மு.ஆசியா மரியம் பயிற்சியை நேரில் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.