மக்களவைத் தேர்தலில், திருப்பூர் தொகுதியில், கள் இயக்கம் சார்பில் இல.கதிரேசன் போட்டியிடுவதாக திங்கள்கிழமை அதன் ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தெரிவித்தார்.
நாமக்கல்லில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது; ஒரு பானை சோற்றுக்கு, ஒரு சோறு பதம் போல்; நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் திருப்பூர் தொகுதியில் கள் இயக்கம் களம் இறங்குகிறது. இத் தொகுதி வேட்பாளராக இல.கதிரேசன் போட்டியிடுகிறார். செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு, அவர் அங்குள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மனுத் தாக்கல் செய்கிறார்.
அரசியல் கட்சிகள் கொள்கைகளை மறந்து, வெவ்வேறு கட்சிகளோடு கூட்டணி அமைக்கும் நிலையில், நாங்கள் எங்களது கொள்கை, நோக்கம் நிறைவேற தனித்துப் போட்டியிடுகிறோம். விவசாயிகளின் பிரச்னை தீர வேண்டும். பெட்ரோல் இறக்குமதியைத் தடை செய்து, எத்தனாலை கொண்டு வரவேண்டும்.
அப்போதுதான் இந்தியா வல்லரசாக மாறும். ராணுவ தளவாடப் பொருள்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும். பிற நாடுகளில் இருந்து இறக்குமதி கூடாது என்பதே எங்களுடைய நோக்கம். அதேபோல், பாமாயிலுக்கு மானியம் கொடுக்கும் அரசு, உள்நாட்டில் தயாரிக்கும் எண்ணெய் பொருள்களுக்கு மானியம் வழங்குவதில்லை. இவ்வாறானவற்றை வலியுறுத்தியே எங்களுடைய பிரசாரம் அமையும். வேட்பாளராகக் களமிறங்கும் இல.கதிசேரன், ஏற்கெனவே, மக்களவைத் தேர்தலிலும், சட்டப்பேரவை இடைத்தேர்தல்களிலும் போட்டியிட்டவர். திருப்பூர் மாவட்டம் காங்கயத்தைச் சேர்ந்த அவர் விவசாயம், பின்னலாடைத் தொழில் செய்கிறார். 46 வயதாகும் அவருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கள் இயக்கத்துக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறார் என்றார் செ.நல்லசாமி.