திருச்செங்கோடு நகராட்சியில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு விழா, விழிப்புணர்வு ரங்கோலி கோலம் போடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு நகராட்சி வளாகத்தில் ரங்கோலி கோலம் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் நூறு சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கோலங்களை வரைந்தனர். இதனையடுத்து மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர். நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும், தங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என்பது போன்ற வாக்குறுதிகளை உறுதிமொழியாக ஏற்றனர். நிகழ்ச்சிக்கு திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் மணிராஜ் தலைமை வகித்தார். இதனைத் தொடர்ந்து மகளிர் சுய உதவிக் குழுவினர் மனிதச் சங்கிலி அமைத்து வாக்களிப்பதன் அவசியம் குறித்து பிரசாரத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையத்திலிருந்து வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்த பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் விவிபேட் எனப்படும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் இயந்திரம் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.