நாமக்கல் நரசிம்மர், அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் கோயில் திருத்தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மலையின் ஒரு புறத்தில், குடவறைக் கோயில்களான நரசிம்ம சுவாமி, நாமகிரி தாயார் சன்னதியும், மற்றொரு புறத்தில் அரங்கநாதர் சன்னதியும் அமைந்துள்ளன. நரசிம்மர் கோயிலின் முன்புறம் 18 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சுவாமி கம்பீரமாக எழுந்தருளியுள்ளார்.
இக் கோயில்களுக்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும் பங்குனி மாதத்தில், நரசிம்மர், அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமி கோயில் திருத்தேரோட்ட பெருவிழா சிறப்பாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டின் திருத்தேர் பெருவிழா, கடந்த 14 - ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதைத் தொடர்ந்து, கோயில்களில் திருமஞ்சனம், பல்லக்கு புறப்பாடு, சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம் திருவீதி உலா நிகழ்வுகள் நடைபெற்றன. மேலும், சுவாமி தாயாருடன் சேஷ வாகனம் மற்றும் யானை வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. புதன்கிழமை மாலை ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் நரசிம்மர், அரங்கநாதர் சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதன்பின், பக்தர்கள் திருமாங்கல்ய தாரணம், இறைவனுக்கு மொய் சமர்ப்பித்து, மாங்கல்ய பொட்டு அளித்தல், பட்டு அங்கவஸ்திரம் அளித்தல், மணவறை அலங்காரம் உள்ளிட்டவற்றை மேற்கொண்டனர். இரவில், குதிரை வாகனத்தில் வீதியுலா மற்றும் திருவேடுபரி உற்சவம் நடைபெற்றது.
திருத்தேரோட்டத்தின் முக்கிய நிகழ்வான நரசிம்மர் சுவாமி தேர் வீதியுலா வெள்ளிக்கிழமை காலை 8.45 மணிக்கு தொடங்கியது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கட்டளைதாரர்கள், தேர் ஜோடனை குழுவினர் பங்கேற்று தேரை வடம் பிடித்து தொடக்கி வைத்தனர்.
உற்சவ மூர்த்தியான நரசிம்மர் சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார் தேரில் இருந்தபடி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நரசிம்மர் கோயில் முன்பிருந்து புறப்பட்ட தேர், ஆஞ்சநேயர் கோயில் வழியாகச் சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு, அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் கோயில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. கடைவீதி பகுதியைச் சுற்றி வந்த இரு தேர்களையும் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
சனிக்கிழமை (இன்று) காலை 10 மணிக்கு மேல், தீர்த்தவாரி மற்றும் சத்தாவரணம், கஜலட்சுமி வாகன வீதியுலா, ஞாயிற்றுக்கிழமை வசந்த உற்சவம், பல்லக்கு புறப்பாடு, 25 - ஆம் தேதி விடையாற்றி உற்சவம், 26 -ஆம் தேதி புஷ்ப பல்லக்கு, 27 - ஆம் தேதி, நாமகிரி தாயார் சன்னதியில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. 28-ஆம் தேதி ஊஞ்சல் உற்சவம் மற்றும் மங்கள இசையுடன் திருத்தேர் திருவிழா நிறைவுபெறுகிறது.