பரமத்தி வேலூர், பரமத்தி மற்றும் நல்லூர் ஆகிய பகுதிகளில் காவல் துணைக் கண்காணிப்பாளர் பழனிசாமி தலைமையிலான போலீஸார் நடத்திய சோதனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 - க்கும் மேற்பட்ட மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசுக்கு பரமத்தி வேலூர் பகுதியில் பதுக்கி வைத்து மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் பரமத்தி வேலூர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் பழனிசாமி, ஆய்வாளர்கள் மனோகரன், செந்தில்குமார் மற்றும் போலீஸார் வியாழக்கிழமை இரவு பரமத்தி வேலூர் அருகே உள்ள பொய்யேரி, பரமத்தி மற்றும் நல்லூர் ஆகிய பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் பொய்யேரி பகுதியில் அனுமதியின்றி டாஸ்மாக் கடையின் அருகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 மதுப் புட்டிகள், பரமத்தி பகுதியில் 27 மதுப்புட்டிகள், நல்லூர் பகுதியில் 10 மதுப்புட்டிகள் என மொத்தம் 59 மதுப் புட்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் அனுமதியின்றி இரவு நேரங்களில் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.