கோயில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் உள்ளதால், நடவடிக்கை எடுக்கக் கோரி சனிக்கிழமை கோட்டாட்சியர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பீமநாயக்கனூர் ஊராட்சியில் 2,500 - க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இக்கோயிலில், ஒரு சமூகத்துக்கு உள்பட்ட பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் திருவிழா நடைபெறும். இக்கோயிலில் பணியாற்றும் சிலருக்கும், அப்பகுதி மக்களுக்கும் இடையே கோயில் நிர்வாகம் தொடர்பாக மோதல் போக்கு இருந்து வந்துள்ளது.
இதனிடையே, மார்ச் 23-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரையில் திருவிழாவை நடத்த கோயிலில் பணியாற்றுவோர் முடிவு செய்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அங்குள்ள மக்கள், நாமக்கல் சார்-ஆட்சியர் சு.கிராந்திகுமார் பதியை சந்தித்து முறையிட்டனர். அவர், வெள்ளிக்கிழமை திருவிழா நடத்துவதற்கு தடை விதித்தார். ஆனால், அதையும் மீறி கோயிலில் பணியாற்றுவோர் திருவிழா நடத்துவதற்கான முயற்சியில் ஈடுபடுவதால், பீமநாயக்கனூரில் எந்த நேரத்திலும் மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோயிலையும், சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வலியுறுத்தி, பீமநாயக்கனூர் மக்கள், சனிக்கிழமை கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து மனு அளித்தனர். சம்பந்தப்பட்ட பகுதி வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரிடம் விசாரணை நடத்த சார் - ஆட்சியர் உத்தரவிட்டார். அசம்பாவிதத்தைத் தவிர்க்க சேந்தமங்கலம், எருமப்பட்டி போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.