பரமத்திவேலூர் வட்டம்,பரமத்தியில் வியாழக்கிழமை நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு குறித்த குறும்படங்கள் மின்னணுக் காட்சி மூலம் பொதுமக்களிடையே ஒளிபரப்பப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையத்தின் மூலம் குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வாக்காளர் தான் வாக்களிக்க வேண்டிய வேட்பாளருக்குத்தான் வாக்களித்தோமா என்பதை உறுதி செய்யும் விவிபேட் இயந்திரத்தின் செயல்பாடுகள் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு குறும்படங்கள் செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் வாகனத்தில் பொருத்தப்பட்ட அதிநவீன மின்னணு ஒளிபரப்பு திரை மூலம் பொதுமக்களிடையே ஒளிபரப்பப்பட்டது. பரமத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட மரவாபாளையம்,கபிலர்மலை சாலை, ஓவியம்பாளையம்,மாவுரெட்டி, பரமத்தி அங்காளம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் இந்த குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டன. இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள வாக்காளர் சேவை எண் 1950 குறித்து வாக்காளர் தங்கள் பெயர்,முகவரி,வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடி உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இந்த வாக்காளர் சேவை எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பது உள்ளிட்டவைகள் குறித்து குறும்படம் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.