நாமக்கல் மாவட்ட சவஹர் சிறுவர் மன்றத்தின் கோடைக்கால கலைப் பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை
தொடங்கியது.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் நாமக்கல் மாவட்ட சவஹர் சிறுவர் மன்றம் சார்பில், 16 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கான கோடைக்கால கலைப் பயிற்சி, நாமக்கல் கோட்டை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சி முகாமில், வாய்ப்பாட்டு, பரதநாட்டியம், கராத்தே, யோகா, கிராமிய நடனம், சிலம்பம், ஓவியம், கைவினைப் பொருள்கள் தயாரிப்பு உள்ளிட்ட கலைப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்தப் பயிற்சி முகாமானது, மே 10 - ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
இப்பயிற்சி முகாமில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று மாணவ, மாணவியர் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவர். மேலும், இம்முகாமில் பங்கேற்கும் அனைவருக்கும் பயிற்சியின் நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட சவஹர் சிறுவர் மன்றத் திட்ட அலுவலர் தில்லை சிவக்குமார் செய்திருந்தார்.