பரமத்திவேலூர் பூக்கள் ஏலச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூக்களின் விலை உயர்வடைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.
பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகள் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். பரமத்தி வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுத்துச் செல்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.160, சம்பங்கி கிலோ ரூ.80, அரளி கிலோ ரூ.200, ரோஜா கிலோ ரூ.150, முல்லைப்பூ ரூ.400- க்கும் ஏலம் போனது. வெள்ளிக்கிழமை (மே 3) நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.200, சம்பங்கி கிலோ ரூ.110, அரளி கிலோ ரூ.280, ரோஜா கிலோ ரூ.200, முல்லைப்பூ கிலோ ரூ.400 - க்கும் ஏலம் போனது. பூக்களின் வரத்து அதிகரித்திருந்த போதிலும் அமாவாசையை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.