குமாரபாளையம் அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
குமாரபாளையம் அருகே உள்ள குப்பாண்டபாளையம் ஜெ. ஜெ. நகரைச் சேர்ந்த சிங்காரவேலன் மகன் வசந்தகுமார் (17). 12-ஆம் வகுப்பு மாணவரான இவர், தனது நண்பர்களுடன் புதன்கிழமை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராமல் ஆழமான பகுதிக்குச் சென்ற அவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். இதைக் கண்ட நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதனால், தண்ணீரில் மூழ்கிய மாணவர் வசந்தகுமார் மூச்சுத் திணறி உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் பவானி தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வசந்தகுமாரின் சடலத்தை மீட்டனர்.