பரமத்தி வேலூர் அருகே உள்ள ஓலப்பாளையம் மில்லினியம் பள்ளி மாணவியர், தேசிய வில்வித்தைப் போட்டியில் வெற்றி பெற்று சர்வதேச வில்வித்தைப் போட்டிக்குத் தேர்வு பெற்றுள்ளனர்.
தேசிய விளையாட்டு மற்றும் கலாசார வளர்ச்சிக் கழகம் சார்பில் தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகம், கேரளம், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 3 வயது முதல் 40 வயது வரையிலான 300 - க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். தமிழக அணி சார்பில், ஓலப்பாளையம் மில்லினியம் பள்ளியைச் சேர்ந்த 10 வயதுக்கு உள்பட்டோருக்கான ரீக்கிரவ் பெளவ் பிரிவில் மாணவியர் கலந்து கொண்டனர். இதில் மாணவி நேத்ரா தங்கப் பதக்கமும், தேவிப்பிரியா வெள்ளிப் பதக்கமும், துவாரகா வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர். மாணவி நேத்ரா, தேவிப்பிரியா மற்றும் துவாரகா ஆகியோர் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான வில்வித்தைப் போட்டியில் பங்கேற்கவுள்ளனர். பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவியரை, பள்ளியின் தாளாளர் டாக்டர் சீனிவாசன் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தார். மாணவியருக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பரமத்தி வேலூர் ஜே.சி.ஐ. சங்கத்தினர், எஸ்.பிட்னஸ் உடற்பயிற்சி நிலையத்தினர், ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவியரை பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.