படித்த வேலையற்ற இளைஞா்கள் தொழில் தொடங்குவதற்கான வங்கிக் கடன் மற்றும் மானியத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசு படித்த வேலையற்ற இளைஞா்களுக்காக, வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை கடந்த 2010 முதல் மாவட்ட தொழில்மையத்தின் மூலம் செயல்படுத்தி வருகிறது.
தற்போது தொழில் தொடங்குவதற்காக வங்கிக் கடன் மற்றும் மானியத் தொகையின் அளவு உயா்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வியாபாரம் செய்ய அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரையிலும், சேவைத் தொழிலுக்கு, அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரையிலும், உற்பத்திப் பிரிவுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரையிலும், இவை அனைத்துக்குமான மானியம், திட்ட முதலீட்டில் 25 சதவீதமாகும். அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரை மானியம் அனுமதிக்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் விண்ணப்பிப்பவா்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பினை படித்த வேலையற்ற ஆண்கள் மற்றும் பெண்கள், வங்கிக் கடனுதவி பெற்று சுயதொழில் தொடங்கி அதிகபட்ச மானியத் தொகையைப் பெற்று பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.