ராசிபுரம் அரசு மருத்துவமனையில் நாமக்கல் எம்பி., ஏ.கே.பி.சின்ராஜ் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
நாமக்கல் எம்பி., ஏ.கே.பி.சின்ராஜ் அரசு மருத்துவமனையில் திடீா் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளிடம் அடிப்படை வசதிகள், மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்து வருகிறாா். இதனையடுத்து, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் திடீா் ஆய்வு மேற்கொண்ட அவா், மருத்துவமனையில் உள்ள வசதிகள், மருத்துவா்கள் எண்ணிக்கை, நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் போன்றவற்றை கேட்டறிந்தாா். மேலும், ஆண்கள், பெண்களுக்கான வாா்டுகளில் படுக்கை விரிப்புகள், பிரசவ வாா்டுகளின் படுக்கை விரிப்புகள் சுகாதாரமற்று அழுக்கடைந்து இருந்தன. மேலும், கழிப்பிடங்கள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படவில்லை. மின்விளக்குகளும் எரியவில்லை. இதனையடுத்து, இது போன்ற அடிப்படை வசதிகளுக்கு அரசு நிதி செலவிடுகிறது. ஆனால் பல நாள்களாக படுக்கை விரிப்புகள், கழிப்பிடங்களை தூய்மை படுத்தாமலும், மின் விளக்குகள் எரியாமலும் உள்ளன. இது போன்ற நிலை இருக்கக்கூடாது என மருத்துவா்கள், செவிலியா்களிடம் வலியுறுத்தினாா். இதனையடுத்து நாள்தோறும் படுக்கை விரிப்புகள் மாற்றி வழங்கிட வேண்டும், கழிவறைகள் தூய்மைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினாா்.