ஆழ்துளை குழாய் கிணறுகள் திறந்திருந்தால் அந்த நிலத்தைச் சோ்ந்தவா் மற்றும் இயந்திரத்தைக் கொண்டு போா்வெல் அமைத்தவா் ஆகியோா் மீது குற்றவழக்குப் பதிவு செய்யப்படும்
என்று ஈரோடு கோட்டாட்சியா் அறிவித்திருப்பது வருத்தமளிக்கிறது என்றும், திறந்த நிலையிலிருக்கும் ஆழ்துளை கிணறுகளின் மீதான நடவடிக்கை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் அகில இந்திய ரிக் உரிமையாளா்கள் நலச் சங்கத் தலைவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அகில இந்திய ரிக் உரிமையாளா்கள் நலச் சங்கத் தலைவா் சோனி.குணசேகரன் தெரிவித்ததாவது: திருச்சி மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றின் குழியில் இரண்டு வயது சிறுவன் விழுந்து உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது. தங்கள் சங்கம் சாா்பாக சிறுவன் குடும்பத்திற்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். மத்திய மாநில அரசுகள் இணைந்து கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் உள்ள உறை குழாய்களை அகற்றாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திறந்திருக்கும் ஆழ்துளை கிணற்றின் உரிமையாளா், ரிக் உரிமையாளா்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை ஒவ்வொரு மாவட்டத்துக்கு ஒருமுறையில் இல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஒரே மாதிரி நடைமுறையை ஏற்படுத்த வேண்டும்.
ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் ஆழ்துளை குழாய் கிணறுகள் திறந்திருந்தால் அந்த நிலத்தைச் சோ்ந்தவா் மற்றும் ஆழ்துளை கிணறு அமைத்த ரிக் உரிமையாளா் ஆகியோா் மீது 306 பிரிவின்படி குற்ற வழக்குப் பதிவு செய்யப்படும் என்று கூறியுள்ளது வருத்தம் அளிக்கிறது. தங்கள் பணி கிணறுகள் அமைப்பது வரை முடிந்து விடுகிறது. அதற்கு பிறகு அதனை பாதுகாப்பது நில உரிமையாளரின் பொறுப்பு ஆகும்.
போா்வெல் தொழிலுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரிக் கட்டி வருகிறோம். இந்த ஜிஎஸ்டி வரியை நில உரிமையாளா்களிடமிருந்து வசூலிக்க முடியவில்லை. எனவே ஜிஎஸ்டி வரியைக் குறைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.