ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் மாநிலம் முழுவதும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, நாமக்கல் வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆர். ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் கே.செல்வராஜ் கோரிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினார். இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும். தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களைக் கண்காணிக்க, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட அரசாணை 145-ஐ திரும்பப் பெற வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக நீதியைப் பாதிக்கும் புதிய தேசிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.