நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை(செப்.13) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வெள்ளிக்கிழமைதோறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, வரும் வெள்ளிக்கிழமை(செப்.13) நடைபெறும் முகாமில், தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
இதில் மேலாளர், கணினி இயக்குபவர், கணக்காளர், காசாளர் தட்டச்சர், மெக்கானிக் போன்ற பணிகளுக்கு தேர்வு செய்யவுள்ளனர். 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர், 12-ஆம் வகுப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. (தொழிற்பழகுநர்) பயிற்சி முடித்தவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நேரில் பங்கேற்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.