நாமக்கல்லில் நெகிழி பைகளை பயன்படுத்திய கடைகளுக்கு, நகராட்சி அதிகாரிகள் ரூ.22 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
நாமக்கல் நகராட்சிப் பகுதியில் செயல்படும் வர்த்த நிறுவனங்கள், ஹோட்டல்கள், தள்ளுவண்டி கடைகள் ஆகியவற்றில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பயன்படுத்தப்படுவதாக நகராட்சி அலுவலகத்துக்கு புகார் சென்றது. அதனையடுத்து, நகராட்சி ஆணையர் கே.எம்.சுதா உத்தரவின்பேரில், கடந்த இரு நாள்களாக, சுகாதார அலுவலர் சுகவனம் தலைமையில் சுகாதார ஆய்வாளர் உதயகுமார் மற்றும் மேற்பார்வையாளர்கள் கடைகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். இதில் 55 கடைகளில் நடத்திய சோதனையில் 17 கடைகளில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து 26 கிலோ நெகிழி பைகளை பறிமுதல் செய்த நகராட்சி சுகாதார அலுவலர்கள், அவற்றைப் பயன்படுத்திய கடைக்காரர்களுக்கு தலா ரூ.ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.22 ஆயிரம் அபராதம் விதித்தனர்.