பரமத்தி வேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார், இரு சக்கர வாகன பழுது நீக்கம் கடைக்குள் புகுந்ததில் ஒருவர் படுகாயமடைந்தார்.
பரமத்தி வேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடை நடத்தி வருபவர் பிரபு. இந்த நிலையில் புதன்கிழமை மாலை இந்த வழியாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனத்தில் வந்த வேலூர், கந்தநகரைச் சேர்ந்த கலையரசன் (56) என்பவர் மீது மோதியுள்ளது. பின்னர் பிரபுவின் கடையின் மேற்கூரையில் மோதி, இரு சக்கர வாகனங்கள் மீது மோதி நின்றது. இதில் படுகாயமடைந்த கலையரசன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்தில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் காரின் அடியில் சிக்கி சேதமடைந்தன. இந்த சம்பவம் தொடர்பாக அங்கிருந்த பொதுமக்கள் காரை ஓட்டி வந்த பொத்தனூரைச் சேர்ந்த ஜெகதீஷ் (37) என்பவரை பிடித்து பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காரை ஓட்டி வந்த ஜெகதீஷ் மது அருந்தியிருந்ததாகவும், அவரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் பரமத்தி வேலூர் போலீஸார் தெரிவித்தனர்.