பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் அருகே வியாழக்கிழமை காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் உடலை போலீஸார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜேடர்பாளையம் அருகே உள்ள அரசம்பாளையத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் குமரவேல் (26). இவர் வியாழக்கிழமை காலை அரசம்பாளையம் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆற்றில் தண்ணீர்வரத்து அதிகமாக இருந்ததால் அவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் ஜேடர்பாளையம் போலீஸாருக்க தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார், மீனவர்கள் மற்றும் அப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் உதவியுடன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் உடலைத் தேடினர். இந்த நிலையில் மாலையில் அரசம்பாளையம் காவிரி ஆற்றின் சிறிது தூரத்தில் குமரவேலின் உடல் மீட்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.