கொல்லிமலை வட்டார விவசாயிகளுக்கு விதை, இடு பொருள்கள் மானிய விலையில் வழங்கப்படும் என வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குநர் தி.அன்புச்செல்வி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கொல்லிமலை வட்டார விவசாயிகள், செம்மேட்டில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடப்பு காரீப் பருவத்திற்கேற்ற விதை நெல் ரகம் ஐ.ஆர்-20, விதை ராகி ரகம் கோ - 14 உயர் ரக விளைச்சல் தரும் ரகங்கள், உயிர் உரங்கள் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம், விதைக் கிராம திட்டத்தின் கீழ் தமிழக அரசு வழங்குவதை மானிய விலையில் பெற்று பயன் பெறலாம். இடுபொருள்கள் விவரம் மற்றும் மானியத் திட்டங்கள் பற்றி விவசாயிகள் தெரிந்து கொள்ள "உழவன் செயலி' பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். பயிர் விளைச்சல் அதிகப்படுத்த உயிர்உரங்கள் (அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா) மற்றும் சூடோமோனாஸ் (எதிர்நுண்ணுயிர் காரணிகள்) பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று வருமானத்தை இரட்டிப்பாக்கலாம். மேலும், விவரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் அல்லது வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.