நாமக்கல்லில் விநாயகர் கற்சிலையைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாமக்கல் - மோகனூர் சாலையில், தனியார் பள்ளி முன்பாக உள்ள பாலமரத்து விநாயகர் கோயிலுக்கு அருகேயுள்ள மகரிஷி நகர் பகுதி மக்கள் உள்ளிட்ட பலரும் வந்து செல்வர்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு மழை பெய்து கொண்டிருந்தபோது, ஆட்டோவில் வந்த சிலர், கோயிலில் இருந்த விநாயகர் சிலையை பெயர்த்து திருடிச் சென்றனராம்.
இதையடுத்து, வியாழக்கிழமை காலை கோயிலுக்கு வந்த பக்தர்கள் சிலை இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து, சிலையை உடனடியாக மீட்க வேண்டும் என்றும் திருட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் நாமக்கல் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல் ஆய்வாளர் பொன்.செல்வராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, நாமக்கல் - துறையூர் சாலையில், தூசூர் அருகே விநாயகர் சிலை திருடப்பட்ட நிலையில், பொதுமக்கள் துரத்தியதால் அந்த சிலையை போட்டு விட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். அந்த சிலை திருட்டில் ஈடுபட்டவர்கள், இந்த சிலைத் திருட்டிலும் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.