நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கத்தில், வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.5 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.
நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க அலுவலகத்தில், வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுகிறது. நாமக்கல், துறையூர், ஆத்தூர், ராசிபுரம், கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வருவர். அதன்படி நடைபெற்ற ஏலத்தில் 250 மூட்டை ஆர்.சி.ஹெச், சுரபி ரக பருத்தி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் பருத்தியை ஏலம் எடுக்க வந்திருந்தனர். இதில், ஆர்.சி.ஹெச் ரகம் ரூ.5,229 முதல் ரூ.5,850 வரையிலும், சுரபி ரகம் ரூ.5,406 முதல் 5,960 வரையிலும் விலை போயின. மொத்தம் ரூ.5 லட்சத்துக்கு இச்சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.