மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்று ரூ.1500 வரை விலை உயர்வு அடைந்துள்ளது.
பரமத்தி வேலூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்படும் மரவள்ளிக் கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலையில் ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.
மரவள்ளிக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து, புள்ளிகள் அடிப்படையில் ஆலை உரிமையாளர்கள் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளிக் கிழங்கு டன் ரூ.9 ஆயிரம் வரை விற்பனையானது. தற்போது டன் ரூ.1500 வரை விலை உயர்ந்து ரூ.10, 500-க்கு விற்பனையாகி வருகிறது.
சிப்ஸ்க்கு தயாரிக்கப்படும் மரவள்ளிக் கிழங்கு கடந்த வாரம் டன்னுக்கு ரூ.11 ஆயிரத்துக்கு விற்பனையானது. தற்போது டன்னுக்கு ரூ.11,500-க்கு விற்பனையாகி வருகிறது.
மரவள்ளிக் கிழங்கில் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்வு அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.