நாமக்கல் அருகே சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்த நிகழ்வை தொடர்ந்து அவர்களது குடும்பத்தினரை அமைச்சர் பி.தங்கமணி ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பரமத்திவேலூர் அருகே உள்ள பரமத்தியைச் சேர்ந்தவர் கேசவன் (66). இவரது மனைவி கண்ணம்மாள் (55), மகன் சரவணன் (35), மருமகள் வசந்தி (32), ஒரு வயது குழந்தை சாய் பிரஜின் மற்றும் கேசவனின் நண்பர் ராஜேந்திரன் (64) ஆகியோர் சனிக்கிழமை காலை காரில் திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது நாமக்கல் அருகே உள்ள மாணிக்கவேலூர் பிரிவு சாலை அருகே வந்த போது லாரியும், அவர்கள் வந்த காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த வசந்தி சேலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து பரமத்திவேலூர் மின் மயானத்தில் விபத்தில் பலியானவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை இறுதிச்சடங்கு நடைபெற்றது. தகவல் அறிந்து அங்கு வந்த அமைச்சர் பி. தங்கமணி, விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.