கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நடைமுறையில் இருந்து வரும் பலன்களை அபகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாமக்கல் தொழிலாளர் நலத் துறை அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நாமக்கல் மாவட்ட கட்டடத் தொழிலாளர் சங்கச் செயலாளர் சி.நந்தகுமார் தலைமை வகித்தார். போக்குவரத்துத் தொழிலாளர் சம்மேளன மாநிலச் செயலாளர் என்.முருகராஜ் ஆர்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்தார். அரசுப் பணியாளர் சங்க முன்னாள் நிர்வாகி என்.தம்பிராஜா, விவசாயத் தொழிலாளர் சங்கச் செயலாளர் சி.ஜெயராமன், சுமை துக்கும் தொழிலாளர் சம்மேளன மாநிலப் பொருளாளர் எஸ்.ஜெயராமன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். இதில், மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்ட திருத்தங்களைத் திரும்பப் பெற வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நடைமுறையில் இருந்து வரும் பாதுகாப்பையும், பலன்களையும் தொடர்ந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், கட்டுமானத் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.