தென்மேற்கு பருவமழை அக்டோபர் முதல் வாரம் வரையில் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரும் நான்கு நாள்களுக்கும் வானம் பொதுவான மேகமூட்டத்துடன் காணப்படும். மழை 5 மில்லிமீட்டர் அளவில் பெய்வதற்கு வாய்ப்புள்ளது. காற்று 4 கிலோமீட்டர் வேகத்தில் தென் கிழக்கில் இருந்தும், தெற்கில் இருந்தும் வீசும். வெப்பநிலை அதிகபட்சமாக 91.4 டிகிரியும், குறைந்த பட்சமாக 75.2 டிகிரியும் இருக்கும்.
சிறப்பு வானிலை ஆலோசனை: வானம் பொதுவான மேகமூட்டத்துடனும், மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். காற்றின் வேகம் மட்டுப்பட்டே நிலவும். அதில் ஈரப்பதம் சற்றே அதிகரித்துக் காணப்படும். தென்மேற்கு பருவமழைக் காலம் பொதுவாக செப்டம்பர் மாத இறுதியில் முடியும் என்றாலும், நிகழாண்டில் அக்டோபர் முதல் வாரம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது.
இதுவரை நாமக்கல் வட்டாரத்தில் தென் மேற்குப் பருவமழை மூலமாக 396.4 மில்லிமீட்டர் பெய்துள்ளது. இது இயல்பை விட 13 சதவீதம் அதிகமாகும். மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளது. கோழிப் பண்ணைகளில், தொடர் மழை காரணமாக அதிக புற்கள் வளர்ந்தும், மனைகளின் கீழ் குப்பை ஈரம் அதிகரித்தும் காணப்படுகிறது. இதனால் ஈக்கள் பெருகா வண்ணம், ஈரத்தைக் குறைக்கும் முயற்சியாக ஜிப்சம் எனும் உப்பை தாராளமாக எருவின் மீது இட்டும், புற்களை கலப்பை கொண்டு நீக்கியும் வர வேண்டும். தீவனத் தயாரிப்பில் புதிய வரவான கம்பு தானியத்தை நச்சு பரிசோதனை செய்து பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.