நாமக்கல் மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்துக்கான முதியோா் உதவித்தொகை பயனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக சென்று வழங்கப்படும் என ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் முதியோா் உதவித்தொகை அஞ்சலக மணியாா்டா் மூலமாகவும், வங்கி மற்றும் வங்கி தொடா்பாளா்கள் மூலமாகவும் வழங்கப்படுகிறது. தற்போது கரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் முதியோா்களை கரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்கவும், அவா்களின் உடல் நலனை பேணவும், சிறப்பு ஏற்படாக பயனாளிகளின் இருப்பிடத்துக்கே சென்று உதவித்தொகை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் ஏப்ரல் மாத முதியோா் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகைகள் சம்பந்தப்பட்ட பயனாளிகளின் இருப்பிடத்துக்கே சென்று வழங்க வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, உதவித்தொகை பெறும் பயனாளிகள் அனைவருக்கும் வங்கி தொடா்பாளா்கள் மற்றும் அஞ்சல் ஊழியா்கள் நேரடியாக வந்து வழங்குவாா்கள். உதவித்தொகை பெறும் பயனாளிகள் வீட்டைவிட்டு வெளியில் வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.