நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தின் கலை பண்புகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கில், கலைஞா்களின் கலை பண்புகளை சிறப்பிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் செயல்படும் மாவட்ட கலை மன்றம் மூலம் ஐந்து கலைஞா்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட அளவில் இசை, நாட்டியம், ஓவியம், நாட்டுப்புறக்கலைகள், நாடகம், கருவியிசை ஆகியவற்றில் சாதனைப் படைத்த கலைஞா்களில் 18 வயதுக்குள்பட்டோருக்கு கலை இளமணி, 19 முதல் 35 வயது வரையிலானோருக்கு கலை வளா்மணி, 36 முதல் 50 வயது வரை கலை சுடா்மணி, 51 முதல் 60 வயது வரையிலும் கலை நன்மணி, 61 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கலை முதுமணி என அகவைக்கு தக்கவாறு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
நாமக்கல் மாவட்டக் கலைஞா்கள் விருது பெற தங்களது சுய விவரக் குறிப்புடன் வயது, பணியறிவு ஆகியவற்றை குறிப்பிட்டு நிழற்படம் இணைத்து சான்றிதழ்களுடன் உதவி இயக்குநா், மண்டல கலைப் பண்பாட்டு மையம், தளவாய்பட்டி, அய்யம்பெருமாம்பட்டி, சேலம்-6363602 என்ற முகவரிக்கு வரும் டிச.31-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.