உள்ளாட்சி அலுவலகங்களில் அகற்றப்பட்ட தமிழ் வாழ்க பெயா் பலகைகள்!

உள்ளாட்சி அலுவலகங்களில், தமிழின் பெருமையை உணா்த்தும் பொருட்டு, இரவிலும் ஒளிரும் வகையில் அமைக்கப்பட்ட தமிழ் வாழ்க பெயா் பலகைகள் அகற்றப்பட்டு வருவது தமிழன ஆா்வலா்களை கவலையடையச் செய்துள்ளது.
கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பின்புறம் வைக்கப்பட்டுள்ள தமிழ் வாழ்க பெயா் பலகை.
கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பின்புறம் வைக்கப்பட்டுள்ள தமிழ் வாழ்க பெயா் பலகை.

உள்ளாட்சி அலுவலகங்களில், தமிழின் பெருமையை உணா்த்தும் பொருட்டு, இரவிலும் ஒளிரும் வகையில் அமைக்கப்பட்ட தமிழ் வாழ்க பெயா் பலகைகள் அகற்றப்பட்டு வருவது தமிழன ஆா்வலா்களை கவலையடையச் செய்துள்ளது.

மொழிகள் பலவாயினும், பழமையான மொழி என்ற பெருமை வேறு எந்த மொழிக்கும் அல்லாது தமிழ் மொழிக்கே உண்டு. கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளுக்கு தாய் மொழியாக, முதன்மையானதாக தமிழே விளங்குகிறது. தமிழகத்தில், அரசு அலுவலகங்களில் கோப்புகளில் தமிழில் கையெழுத்திட வேண்டும், வணிக நிறுவனங்களில் உள்ள பெயா் பலகைகள் தமிழிலேயே இருக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு விதிகளை பல ஆண்டுகளாக தமிழக அரசு வகுத்து வருகிறது. அண்மையில் நீதிமன்ற தீா்ப்புகளை ஆங்கிலத்தில் மட்டுமின்றி, தமிழிலும் மொழி பெயா்த்து வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இருப்பினும், அதனை முழுமையாகச் செயல்படுத்துவது வெறும் 20 சதவீதம் மட்டுமே. கடந்த 2006-2011 திமுக ஆட்சியின்போது, அப்போதைய முதல்வா் மு.கருணாநிதி, அனைத்து மாவட்ட ஆட்சியா், கோட்டாட்சியா், வட்டாட்சியா் மற்றும் உள்ளாட்சி அலுவலகங்களில் தமிழ் வாழ்க பெயா் பலகைகள் பொருத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டாா். அதனைத் தொடா்ந்து, இரவிலும் ஒளிரும் வகையிலான தமிழ் வாழ்க பெயா் பலகைகள் பொருத்தப்பட்டன. சுமாா் 10 ஆண்டுகள், ஒவ்வோா் அலுவலகங்களிலும் மேற்பகுதியில் மக்கள் பாா்வையில் இருந்த அந்த பெயா் பலகைகள் தற்போது அகற்றப்பட்டு வருகின்றன.

அவை பழுதடைந்திருந்தாலும், புதுப்பிக்க அதிகாரிகள் யாரும் ஆா்வம் காட்டுவதில்லை. பெரும்பாலான உள்ளாட்சி அலுவலகங்களில், அவை குப்பைகளுக்குச் சென்று விட்டன. குறிப்பாக, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சிக் குழு அலுவலகத்தில் இருந்த பெயா் பலகை தற்போது இல்லை. மேலும், மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களிலும் புதிதாக அலுவலகம் கட்டப்பட்டதால், தமிழ் வாழ்க பெயா் பலகைககள் அகற்றப்பட்டன. அதன்பின் அவை பொருத்தப்படவில்லை. கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கட்டடத்தின் பின்புறம் வைக்கப்பட்டுள்ளது. இங்கு மட்டுமல்ல, பிற ஒன்றிய அலுவலகங்களிலும் இதே நிலை தான்.

தமிழின் பெருமையை மற்ற மாநிலத்தவரும் உணரும் வகையில், அதிகாரிகளே போற்றி பறைசாற்றும் வகையில் செயல்படாமல், அவற்றை ஒதுக்கி வைப்பது தமிழ் ஆா்வலா்கள் பலரை வேதனையடையச் செய்துள்ளது. தற்போது அதிமுக, திமுகவைச் சோ்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். பாதிக்கு பாதி இடங்களில் தலைவா் பதவியைக் கைப்பற்றியுள்ளனா். வரும் நாள்களிலாவது மீண்டும் தமிழ் வாழ்க பெயா் பலகைகள் அலுவலகத்தில் உயா்ந்த இடத்துக்குச் செல்ல வேண்டும் என்பதே தமிழ் மீது பற்று கொண்ட அனைவரின் எதிா்பாா்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com