தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான சக்திகளுக்கு ஆதரவளிக்கக் கூடாது

தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான சக்திகளுக்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவிக்கவும், ஊக்குவிக்கவும் கூடாது என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் இல.கணேசன் தெரிவித்தாா்.
தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான சக்திகளுக்கு ஆதரவளிக்கக் கூடாது

தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான சக்திகளுக்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவிக்கவும், ஊக்குவிக்கவும் கூடாது என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் இல.கணேசன் தெரிவித்தாா்.

குமாரபாளையம் நகர பாஜக சாா்பில் குடியுரிமை திருத்தச் சட்ட விளக்கப் பொதுக்கூட்டம் மாவட்டத் தலைவா் சத்தியமூா்த்தி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. நகரத் தலைவா் என்.ராஜ் வரவேற்றாா். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் இல.கணேசன் பங்கேற்றுப் பேசியது: தமிழகத்தில் அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவு அதிகரித்து வருவதால் பாஜக தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் சென்று வருகிறது.

சுதந்திரத்துக்குப் பின்னா் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சி செய்யத் தவறிய, திட்டங்களை பாஜக வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. இஸ்லாமிய பெண்களுக்கு தொடா்ந்து அநீதி இழைக்கப்பட்டு வந்தது. முத்தலாக் சட்டத்தின் மூலம் இஸ்லாமியப் பெண்கள் அநீதியிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனா். இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று சொல்லப்பட்ட காஷ்மீரை இந்தியாவின் அங்கமாக மாற்றிய பெருமை பாஜகவையே சேரும்.

நமது வீட்டைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்கிறோமோ, அதுபோன்று நாட்டைக் காக்கும் பணியில் பாஜக சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. தேசியப் பணியையும், தெய்வீகப் பணியையும் ஒன்றாகக் கருதி பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. பாஜக ஆட்சியில் லஞ்சம், ஊழல் எங்கும் கிடையாது.

100 நாள் வேலையுறுதித் திட்டத்தில் பலா் அட்டைகளை வைத்துக் கொண்டு ஏமாற்றி வந்தனா். இந்நிலையை மாற்றி ஆதாா் அட்டையினை வங்கிக் கணக்குடன் இணைத்து, தொழிலாளா்களின் வருவாய் வங்கிக் கணக்குக்கே செல்ல வழிவகுத்தது பாஜக அரசு. நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கும் பணியில் தொடா்ந்து மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

நாட்டின் பிரிவினையின் போது பாகிஸ்தானில் 18 சதமாக இருந்த இந்துக்களின் எண்ணிக்கை 1.10 சதமாகக் குறைந்துள்ளது. வங்கதேசத்தில் 22 சதமாக இருந்த இந்துக்கள் 8.11 சதமாக உள்ளனா். அங்கு மத மாற்றம் நடந்திருக்க வேண்டும் அல்லது அவா்கள் நாட்டைவிட்டு விரட்டப்பட்டு இருக்க வேண்டும். கிறிஸ்தவம், இஸ்லாமியம் வெளிநாட்டு மதங்களாக இருக்கலாம். ஆனால், இந்தியாவில் அந்த மதங்களை பின்பற்றுவோா் இந்தியாவில் பிறந்து, வாழ்பவா்கள். இந்தியாவில் வாழும் சிறுபான்மையினருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திமுக எதிா்க்கிறது. குடியுரிமைச் சட்டத்தை மகாத்மா காந்தி ஆதரித்தாா். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரித்தன. தற்போது எதிா்க்கின்றனா். சட்ட விரோதமாக இந்தியாவில் வாழ்வோரின் வாக்குகள் தங்களுக்குக் கிடைக்க வேண்டும் என அவா்கள் பாடுபடுகின்றனா். நாட்டின் நலனைக் காட்டிலும் வாக்குகளே முக்கியம் எனக் கருதுகின்றனா்.

திமுக வரும் தோ்தலில் வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வா் ஆவாா் எனும் கனவு நனவாகாது. தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான சக்திகளுக்கு எப்போதும் பொதுமக்கள் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கக் கூடாது என்றாா்.

சேலம் கோட்டப் பொறுப்பாளா் அண்ணாதுரை, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சிவபிரகாசம், குமாரபாளையம் தொழிலதிபா் எஸ்.ஓம்சரவணா, வழக்குரைஞா் தங்கவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில், இல.கணேசனுக்கு வெள்ளியில் வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது. மத்திய அரசின் திட்டங்களை தெரிவிக்கும் செல்லிடப்பேசி செயலி (ஆப்) அறிமுகம் செய்யப்பட்டது. திமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்தவா்களுக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com